RAJA SUNDARAJ

Monday, November 17, 2008

உலகின் புதிய கடவுள்-இந்தியா


2020 ஜனவரி 1 புது வருஷத்தில் சேலம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார் பழனிச்சாமி.சுமார் 40 வருஷம் கழித்து தாய்நாடு திரும்புகிறார்.

"என்னங்க சேலம் ஏர்போர்ட் மோசமா இருக்கும்னீங்க? வந்து பார்த்தால் ஹீத்ரோ, ஜே எஃப் கே ஏர்போர்ட்டெல்லாம் அந்த பக்கம் நிக்கணும் மாதிரி இருக்கே?" என்றார் திருமதி பழனிச்சாமி.

"அதானே.." என்றபடி கஸ்டம்ஸ் செக் இன்னுக்கு போனார் பழனிசாமி.

யாரும் அவர் உடைமைகளை சோதனை செய்யவில்லை. ஒரே நிமிடத்தில் வெளியே வந்துவிட்டார்.

ஏர்போர்ட்டுக்கு வெளியே டாக்சி ஸ்டாண்டுக்கு போனார். ஒரு டாக்சியில் ஏறினார். டாக்சி டிரைவர் அமெரிக்காகாரன் மாதிரி இருந்தான்.

"என் பேர் ஜேம்ஸ் சார்.சொந்த ஊர் நியூயார்க். சேலத்துக்கு மேல்படிப்பு படிக்க வந்த மாணவன். படிப்பு போக மீதமிருக்கும் நேரத்தில் டாக்சி ஓட்டி சம்பாதிக்கிறேன்" என்றான் ஜேம்ஸ்.

"இந்தியாகாரன் தான் முன்னாடி எல்லாம் வெளியூர் போய் டாக்சி ஓட்டி பிழைப்பான்.இப்ப அமெரிக்காகாரன் இந்தியா வந்து டாக்சி ஓட்டி பிழைக்கும்படி ஆயிடுச்சா?" என அதிசயம் தாங்காமல் முணுமுணுத்தார் திருமதி பழனிசாமி.

"சேலத்துல என்னப்பா விஷேசம்?" என்று கேட்டார் பழனிசாமி.

"சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச எம்.ஜி.ஆர் எனும் படம் ரிலிசாயி பட்டையை கிளப்புது.நான் கூட இன்னைக்கு சாயந்திரம் டிக்கட் எடுத்து வெச்சிருக்கேன்" என்றார் ஜேம்ஸ்.

"இன்னுமா அந்த ஆளு நடிக்கிறான்?என்ன வில்லத்தனம்.." என்று பொங்கினார் பழனிசாமி.

"என்னங்க...சேலம் ரோடெல்லாம் ஒரே குப்பையா கிடக்கும்னீங்க..இங்கே என்னடான்னா ரோட்டுல சோறு போட்டு குழம்பு ஊத்தி சாப்புடலாம் போலிருக்கே?" என்று அதிசயித்தார் திருமதி.

"அதானே...என் கண்ணே பட்டுடும் போலிருக்கே" என்று கண்ணீர் விட்டார் பழனிசாமி.

"எங்காவது நிறுத்தப்பா...பசிக்குது" என்றார்

"பஸ் ஸ்டாண்ட் கிட்ட சரவணபவன் இருக்கு. அங்க நிறுத்தறேன்" என்றான் ஜேம்ஸ்.

"இன்னுமா அது அங்கிட்டு இருக்கு?" என அதிசயித்தார் பழனிசாமி.

சேலம் பஸ்ஸ்டாண்ட் அருகே இருந்த சரவணபவன் 195 அடுக்கு மாடியாக வளர்ந்திருந்தது.

"எதுக்கய்யா 195 மாடி?" என ஓட்டல் சர்வரிடம் கேட்டார் பழனிசாமி.சர்வரை பார்த்தால் ஏதோ ஐரோப்பியனைப்போல் தெரிந்தான்.

"உலகத்துல மொத்தம் 195 நாடு.ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு நாட்டு சமையல் கிடைக்கும்" என்றார் சர்வர்.

"இந்த ஓட்டலில் எல்லா சர்வரும் வெளிநாட்டுகாரனா இருக்கானே?ஏன்?" என்று கேட்டார் திருமதி.

"ஏனா? நல்லா கேப்பிங்கய்யா,கேப்பீங்க..2020ம் ஆண்டில் உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடா உங்க நாடு மாறிடுச்சு. அப்புறம் வெளிநாட்டுகாரன் வந்து இங்க சர்வர் வேலை பாக்காமா என்ன பண்ணுவான்?விடமாட்டோம்.3030ல் இங்கிலாந்தும் மீண்டும் வல்லரசாகும்" என்றபடி சர்வர் உள்ளே போனான்.

வயிறுமூட்ட சாப்பிட்டார் பழனிசாமி. சேலம் டைம்ஸ் டீவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன.

"சேலத்தில் 5000 அடுக்கு மாடி கட்ட மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக இது இருக்கும் என தெரிகிறது.."

"5000 அடுக்கு மாடியா?" என வாய்பிளந்தார் பழனிசாமி.

"பின்ன? சேலமா கொக்கா?' என்றார் அருகே அமர்ந்திருந்த கோவைக்காரர் ஒருவர்.

"தமிழ்நாட்டுக்கு இப்ப முதல்வர் யாருங்க?" என்று கேட்டார் பழனிசாமி

"கடந்த 10 ஆண்டா விஜயகாந்த் தான்யா முதல்வர்" என்றார் கோவைக்காரர்.

பழனிசாமியின் கண்ணில் கண்ணிரே வந்துவிட்டது.

"இந்தியா வல்லரசு" என உரத்து கூவினார்....

அவரது செல்போன் அடித்தது..ஏர்போர்ட்டிலிருந்து பேசினார்கள்.

"நீங்கபாட்டுக்கு இந்தியாவுக்கு டிக்கட் வாங்கிட்டு சேலத்துல இறங்கிட்டா என்ன அர்த்தம்? இன்னும் அரைமணி நேரத்துல இணைப்ப விமானம் கிளம்பிடும்.சீக்கிரம் வந்துடுங்க" என்றார் விமான நிலைய அதிகாரி.

"என்ன உளறறீங்க?சேலம் இந்தியாவில் தானே இருக்கு?" என்றார் பழனிசாமி.

"இது ஒரகான் மாநிலம் சேலம்யா.சீக்கிரம் வந்து சேரு..சேலம்னு போர்டை பாத்தா இறங்கிடுவியா? என் தாலியறுக்கவே கிளம்பிடுங்கய்யா" என திட்டி போனை வைத்தார் அதிகாரி.

No comments: